Tuesday, March 17, 2015

காதல் செய்வோம்!

என் கோட்பாடுகளுக்குள் துளியும் வராதவள் நீ!
எனக்குள் வந்ததன் நிகழ்தகவு, இன்றும் நான் விடையறியா கேள்வியே!

அனைவரையும் எங்கேயாவது அழைத்துச் செல்லும் ரயில்,
எனக்கான தன் பயணத்தில் நான் உன்னை கடக்க செய்தது!

ஆங்கிலம் நிறைந்த உன் தமிழும்,
அழகாய் வடிவமைக்கப்பட்ட உன் ஆடையும்,
கண்களில் நிரம்பி வழிந்த அன்பும்,
பயணத்தில் வரும் ஆயிரம் முகங்களுக்கு மத்தியிலும்,
உன்னை எனக்கு தனியாக அடையாளப்படுத்தியது!

காது அடைக்க ரயில் ஓடியது
உன் முதல் பார்வையின் விளைவு,
நெஞ்சு அடைக்கத் துடிப்பு ஓடியது!
இன்னும் தெளிவாகச் சொன்னால்,
உன் முதல் தொடுகையின் விளைவு,
மரணத்தை ஒரு நொடி தொட்டுத் திரும்பியது உயிர்!

என் கோட்பாடுகளுக்குள் துளியும் வராதவள்,
எனக்குள் வந்ததன் பொருள்!
எனக்குக் காதலை கற்பிக்கவே!
காதலிக்க கற்றுத்தந்தவள் நீ!

தன்னிலைக்கு கீழ் இருப்பவனை மதியாதவன்!
தான் வாழ, பிறர் வாழ்வைப் பறிப்பவன்!
பொருள் மட்டுமே பொருளென்று எண்ணும் மேதை!
இன்னும் பலவாறு இன்னா செய்து பிழைக்கும் அறிவாளிகள்,
அறியாதது வாழ்க்கைப் பொருள்! காதல் பொருள்!

உடல் உருக்கும் உயிரியத்தை சுவாசமாக்கி,
நொடியில் பிரியும் வண்ணம் உயிரை மென்மையாக்கி,
சட்டென கடந்து போகும் பருவமாய் இளமையை வைத்து,
பேராசை வைத்து, கோபம் வைத்து, துன்பம் வைத்து
பசி வைத்து, பிணி வைத்து, வலி வைத்து, துயரம் வைத்து,
இத்தனைக் கடுமையான அமைப்பு வைத்து,
அதில் காதலையும் வைத்து,
ஆயிரம் அழகையும் வைத்து, மேடையை அமைத்தவன்!

உதிரத்தை வியர்வையாய் சிந்தி,
பொருளுக்காக உழன்று ஓடும் காணலாய்,
காதையை அமைத்திருக்க நியாயமில்லை!
ஆதலால் காதல் செய்வோம்!